மும்பை இந்தியன்ஸ் அணியில் சென்ற வருடம் என்னை பார்த்த விதம் வேறு, இந்த வருடம் என்னை பார்த்துவரும் விதம் வேறு என்று சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் திலக் வர்மா.
மும்பை இந்தியன்ஸ் அணி ஒவ்வொரு சீசனிலும் உள்ளூர் போட்டிகளில் அசத்தும் இளம் வீரர்களை கண்டறிந்து, ஐபிஎல் போட்டிகளில் நிறைய வாய்ப்புகள் கொடுத்து அவர்களது திறமையை உலகிற்கே அறிய செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் நடந்த சீசன்களில் ஜஸ்பிரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா போன்ற வீரர்களை விளையாடவைத்து அவர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. தற்போது பும்ரா, ஹார்திக் பாண்டியா போன்றோர் இந்திய அணியில் எத்தகைய உயரத்தில் இருக்கின்றனர் என்பதை பலரும் அறிவோம்.
அந்த வரிசையில் அடுத்த எதிர்காலமாக பார்க்கப்படும் வீரர் திலக் வர்மா. கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல்முறையாக எடுக்கப்பட்டு விளையாடும் வாய்ப்புகளையும் பெற்றார். அதில் நன்றாக செயல்பட்டு 350 ரன்களுக்கும் மேல் அடித்தார்.
இந்த வருடம் இதுவரை விளையாடிய ஐந்து லீக் போட்டிகளில் 54 ரன்கள் சராசரி மற்றும் 159 ஸ்ட்ரைக் ரேட் உடன் 214 ரன்கள் அடித்திருக்கிறார். மும்பை அணிக்கு மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கும் வீரராகவும் இந்த இளம் வயதில் இருந்து வருகிறார்.
இவர்தான் மும்பை அணியின் அடுத்த எதிர்காலமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியிலும் விரைவில் விளையாடுவார் என்று ரோகித் சர்மா உறுதி அளித்தார்.
இப்படிப்பட்ட திறமை வாய்ந்த இளம் வீரர் திலக் வர்மாவிற்கு இப்போது 20 வயதே ஆகிறது. அடுத்த 10-15 வருடங்கள் கிரிக்கெட் வாழ்க்கை இருப்பதால், இவரது திறமையை இன்னும் மெருகேற்றுவதற்கு அணியில் உள்ள ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, பொல்லார்ட் ஆகியோர் நிறைய கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திலக் வர்மா சமீபத்தில் அளித்த பேட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னை எப்படி நடத்துகிறார்கள்? அணியில் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை என்ன? மற்றும் இந்த இளம் வயதில் இவ்வளவு பொறுப்புடன் அழுத்தத்தை எடுத்துக்கொண்டு விளையாடுவது எப்படி? ஆகியவை பற்றி பேசியுள்ளார்.
“மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த சீசனில் என்னை பார்த்த விதம் வேறு. ஆனால் இப்போது என்னை அவர்கள் பார்க்கும் விதம் மாறியுள்ளது. மும்பை அணிக்கு என்னை எடுத்தபோது மிகப்பெரிய அணிக்கு விளையாடுகிறோம் என்கிற பதற்றம் எனக்குள் இருந்தது. அணியின் மூத்த வீரர்கள் நடத்திய விதம் மற்றும் கொடுத்த வாய்ப்புகள் எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது.
மும்பை அணியில் எனக்கு இது இரண்டாவது சீசன் தான். ஆனால் என்னை ஜூனியர் வீரர் போல நடத்துவதில்லை. சீனியர் வீரர்களை எப்படி பார்க்கிறார்களோ, அதுபோலத்தான் நடத்துகிறார்கள்.
மேலும் எனக்கு அணியின் பேட்டிங்கில் தனி ரோல் கிடையாது. பேட்டிங் இறங்கி சுதந்திரமாக என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்து என்று அறிவுத்தினார்கள். இதனால் எந்தவித அழுத்தமும் எடுத்துக்கொள்ளாமல் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரன்கள் அடிக்க முடிகிறது.
சச்சின் டெண்டுல்கர் ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் இருப்பதால் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். தவறுகளை சரி செய்வதற்கும், கடினமான பந்துகளை எப்படி எதிர்கொள்வது என்பதற்கும் அவர்கள் உதவுகிறார்கள்.” என பேட்டி அளித்தார்.