ஏன் தேவை இல்லாத சண்டை… இந்த இரண்டு பேருக்குமே வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு புது ஐடியா கொடுக்கும் ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் சுப்மன் கில் மற்றும் கே.எல் ராகுல் இருவருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில், ஆஸ்திரேலியாவை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடர் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் 8ம் தேதி துவங்க உள்ளது.
நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணியும், தொடரை சமநிலையில் முடிக்க ஆஸ்திரேலிய அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், இரு அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மிக அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங், நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் இடம் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் சுப்மன் கில் மற்றும் கே.எல் ராகுல் என இருவருக்குமே இந்திய அணி ஆடும் லெவனில் இடம் கொடுக்கலாம். சுப்மன் கில் துவக்க வீரராகவும், கே.எல் ராகுல் மிடில் ஆர்டரிலும் களமிறங்கலாம். கே.எல் ராகுல் மிடில் ஆர்டரில் அதிக அனுபவம் உள்ளவர். இங்கிலாந்து ஆடுகளங்களில் கூட கே.எல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவரை மிடில் ஆர்டரில் களமிறக்கலாம்” என்று தெரிவித்தார்.