குல்தீப் பந்து வீச்சை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி, டெஸ்டிலும் சேர்க்கப்படுவார் என சூசகம்

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில், குல்தீப் யாதவின் அபார பந்து வீச்சு மற்றும் ரோகித் சர்மாவின் அட்டகாச சதம் ஆகியவற்றால், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு விராட் கோலி கூறியதாவது:
எவ்வளவு துல்லியமாக வெல்ல முடியுமோ அவ்வளவு துல்லியமான வெற்றி. இது பேட்டிங் பிட்ச் என்பது தெரியும், ஆனால் ரிஸ்ட் ஸ்பின் நடு ஓவர்களில்
சிக்கலைத் தோற்றுவிக்கலாம் என்று எதிர்பார்த்தோம். குல்தீப் பந்து வீச்சு தனிச்சிறப்பானது. சமீபத்தில் இப்படிப்பட்ட ஒருநாள் பந்து வீச்சை நான் பார்க்கவில்லை. அவர் தன்னம்பிக்கையுடன் வீசுவதை விரும்புகிறோம், 
ஏனெனில் குல்தீப் மேட்ச் வின்னர். இந்தப் பிட்ச்களில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை எனில் கடினம்.  டெஸ்ட் போட்டி அணியில் சில ஆச்சரியங்கள் இருக்க வாய்ப்புண்டு. டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் தடுமாறுவதைப் பார்க்கும் போது குல்தீப்பை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்ற தூண்டுதல் உள்ளது” இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

ஆட்ட நாயகன் விருது குல்தீப்புக்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்ற பின் குல்தீப் கூறும்போது, ‘எனக்கு இன்று முக்கியமான நாள். முதல் சில ஒவர்களில், சிறப்பாகத் தொடங்கினேன். எனது முதல் இரண்டு ஓவர்களிலேயே அதிர்ஷ்டவசமாக விக்கெட் கிடைத்தது. எனது முதல் ஓவரை வீசும்போது பந்து கொஞ்சம் திரும்புவதை அறிந்தேன்.

உடனடியாக இது எனக்கான போட்டி என்று தெரிந்து கொண்டேன். சரியான இடத்தில் பந்தை, வெவ்வேறு வகையாக வீசினால் பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாகத் தடுமாறுவார்கள். அதன்படியே செய்தேன். விக்கெட் விழுந்தது. எங்கு விளையாடுகிறோம், மைதானம் சிறியதா, பெரியதா என்பதெல் லாம் எனக்கு பிரச்னையே இல்லை. டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைப்பது பற்றி கேட்கிறார்கள். அழைப்பு வரும் என்று நம்புகிறேன். பார்க்கலாம்’ என்றார்.

Editor:

This website uses cookies.