விராட் கோலி, பும்ராஹ் இல்லை… உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வெல்ல போவது இந்த இந்திய வீரர் தான்; சேன் வாட்சன் கணிப்பு
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருதை வெல்வார் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டியிலுமே மிரட்டல் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
பேட்டிங்கில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும், பந்துவீச்சில் பும்ராஹ், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து வருவதன் மூலம் இந்திய அணியால் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளை இலகுவாக வீழ்த்த முடிந்தது.
அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் என அனைத்திலும் இந்த முறை இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருவதால், தொடர் நாயகன் விருதை இந்திய வீரர்களில் ஒருவர் வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான சேன் வாட்சன், ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருதை வெல்வார் என ஆரூடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேன் வாட்சன் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வெல்வார் என கருகிறேன். ரோஹித் சர்மா இந்த தொடரில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பேட்டிங்கை ரசித்து பார்த்து கொண்டே இருக்கலாம். எவ்வளவு சிறந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் முதல் பந்தில் இருந்தே ரோஹித் சர்மா அடித்து விளையாடக்கூடியவர். இந்த தொடரில் அவர் இன்னும் பல சாதனைகள் படைப்பார் என நம்புகிறேன். அவரே இந்த தொடரில் நம்பர் 1 வீரராகவும் திகழ்வார்” என்று தெரிவித்தார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள ரோஹித் சர்மா அதில் 311 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள் பட்டியலிலும் நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.