நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரியை எடுக்காத இந்திய அணியின் முடிவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த தொடருக்கான இந்திய அணியில் கே.எஸ் பாரத், பிரசீத் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு இடம் கிடைத்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஹனுமா விஹாரிக்கு இடம் கொடுக்காதது முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே போல் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய கே.எல் ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவிற்கு இடம் கொடுத்துள்ளதும் இந்திய அணியின் தேர்வுக்குழுவை விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சூர்யகுமார் யாதவிற்கு கொடுத்த இடத்தை ஹனுமா விஹாரிக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றே பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, ஹனுமா விஹாரியை எடுக்காத இந்திய அணியின் தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரியின் பெயர் இடம்பெறாதது ஏற்றுக்கொள்ள முடியாத விசயம். இது இந்திய தேர்வுக்குழுவின் மிகப்பெரும் தவறு என தெரிவித்துள்ளார்.