ஆமா உண்மை தான்… அவர் இல்லாம நாங்க ஜெயிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்; ராகுல் டிராவிட் ஓபன் டாக்
நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளது நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட நான்கு அணிகளை எதிர்கொண்டுள்ள இந்திய அணி, நான்கு போட்டியிலும் அபார வெற்றி பெற்று அசத்தியது.
நான்கு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், தனது ஐந்தாவது போட்டியான அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடனான போட்டி மற்ற போட்டிகளை விட இந்திய அணிக்கு அதிக சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணியுடனான கடந்த போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், ஹர்திக் பாண்டியா விலகியுள்ளது நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவு தான் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், “ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மிக முக்கியமான வீரர். அவர் எங்களது முக்கியமான ஆல் ரவுண்டர். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் எங்களுக்கு கூடுதல் பலத்தை சேர்த்து வருகிறார். அவர் இல்லாதது நிச்சயமாக எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலான சரியான மாற்று வீரரை தேர்வு செய்து நியூசிலாந்து அணியுடனான போட்டியில் விளையாட வைப்போம். எஞ்சியுள்ள 14 வீரர்களில் சரியான நபரை தேர்வு செய்து விளையாட வைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். உலகக்கோப்பை தொடர் நீண்ட நாட்கள் நடைபெறும் பெரிய தொடர் என்பதால் இது போன்று நடப்பது இயல்பான விசயம் தான்” என்று தெரிவித்தார்.