கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையேயான வித்தியாசம் 2வது டெஸ்ட் போட்டியின் வெளிப்பட்டுவிட்டது என்று ஆசிஷ் நெக்ரா கருத்து தெரிவித்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி யாரும் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவியது. போட்டி துவங்குவதற்கு முன்னர் விராட்கோலி 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை உள்ளாக்கின. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை என இந்திய அணியின் மருத்துவர்கள் குறிப்பிட்டனர். இதனால் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பில் இருந்தார்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் வரை நன்றாக விளையாடி வந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாபிரிக்க வீரர்களின் பாட்னர்ஷிப்களை கட்டுப்படுத்த முடியாமல், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் திணறினர். அப்போது கேஎல் ராகுலின் அனுபவமின்மை நன்றாக வெளிப்பட்டது. அவரால் பந்துவீச்சாளர்களை சரியாக கையாள முடியவில்லை என்று பலரும் கருத்துக்களை முன்வைத்து வந்தனர். மேலும் இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்றும் கடுமையாக சாடினர்.
இந்நிலையில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இதுதான் வித்தியாசம் மற்றும் விராட் கோலி இல்லாதது எந்த அளவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “விராட் கோலி போன்ற மிகப்பெரிய வீரர் அணியில் இல்லாதது எந்த ஒரு அணிக்கும் பின்னடைவையே தரும். மேலும் போட்டியின் முடிவு சாதகமாக அமையவில்லை என்றால், அவரை கண்டிப்பாக அனைவரும் மிஸ் செய்வோம். இந்திய அணி வீரர்களும் அவரை மிஸ் செய்ததாக நான் உணர்கிறேன்.
விராட் கோலி இந்திய அணியில் இருந்தால், அணியின் ஆக்ரோஷம் அடுத்த கட்டத்தில் இருக்கும். அதற்காக கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது இந்திய வீரர்களிடம் அத்தகைய ஆக்ரோஷம் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால் வெற்றிபெறும் ஆக்ரோஷம் இல்லை என நான் உணர்ந்தேன். எளிதாக விட்டுக் கொடுத்து விட்டனர் என்றே தெரிகிறது.” என்றார்