இப்போதிருக்கும் அணியை வைத்து எப்படிப்பட்ட மைதானத்திலும் போட்டியை வெல்ல முடியுமென விராட்கோலி பெருமிதமாக கூறியுள்ளார்.
இந்திய அணி தொடர்ச்சியாக வெளிநாட்டு மைதானங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடன் நடந்த தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5வது போட்டி இன்னும் மீதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரைக் கைப்பற்றியது. தற்போது தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி முன்னிலை பெற்றுள்ளது.
ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து பல மாற்றங்களை செய்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை ஓரளவிற்கு செரிவுபடுத்தி இருக்கின்றனர். இதன் காரணமாகவே வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி கடந்த 2, 3 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றே கூறலாம்.
தென்ஆப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு பேட்டி அளித்த விராட் கோலி கூறுகையில், “தற்போது இருக்கும் இந்திய அணி கடந்த 2, 3 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றிகளையும் குவிக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூன்றிலும் தொடர்ச்சியாக நன்கு செயல்பட வீரர்கள் அதீத பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
பும்ரா, ரிஷப் பண்ட், தாகூர் போன்றோர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தற்போது அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல, இன்னும் சில முன்னணி வீரர்கள் வெளியில் இருக்கின்றனர். இவர்களுக்கு மைதானம் அல்லது எந்த விதமான போட்டி என்பது தடையாக இருக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை வெற்றியாக மாற்ற வேண்டும் இது மட்டும்தான் தெரியும். அப்படியான அணியாக இந்தியா மாறி இருப்பது பெருமிதமாக இருக்கிறது. மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் எங்களது திட்டம் ஒன்றுதான். வெற்றி பெற்றாக வேண்டும் அதுதான்.” என்று நம்பிக்கையாக பேட்டியளித்தார்.