மத்த டீம அடிச்ச மாதிரி இந்தியாவ அடிக்க முடியாது… தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனை உறுதி; எச்சரிக்கும் முன்னாள் வீரர்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 அணிகளையும் வீழ்த்தி கெத்தாக அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ள இந்திய அணி, தனது அடுத்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணியை போலவே மாஸ் காட்டி வரும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதால், இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான போட்டி 5ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் பங்கர், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களால் பெரிதாக ரன் குவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஞ்சய் பங்கர் பேசுகையில், “மற்ற அணிகளுடனான போட்டியில் விளையாடியதை போன்று தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களால் இந்திய அணிக்கு எதிராக விளையாட முடியாது. தென் ஆப்ரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறுவார்கள். பும்ராஹ்வை சமாளிக்க தேவையான திட்டங்களுடன் தென் ஆப்ரிக்கா வந்தால் முகமது சிராஜ் விக்கெட்டை எடுப்பார். முகமது சிராஜையும் சமாளித்துவிட்டால் அடுத்ததாக முகமது ஷமி, அதன்பின் குல்தீப் யாதவ் என தென் ஆப்ரிக்காவிற்கு தொல்லை கொடுக்கும் அளவிற்கு தரமான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தற்போது நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா அணியை விட இந்திய அணியே வலுவானது. தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு அதிகம் என நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.