விராட் கோலியை விட இந்த விஷயத்தில் சாமர்த்தியமானவர் என ஒப்பிட்டு பேசியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.
சமீபகாலமாக இந்திய அணியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் கேப்டன் விராட் கோலி. ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகினார். மேலும் தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ஒரே மாதிரியான தவறை செய்து ஆட்டம் இழந்ததால், தனது பேட்டிங் குறித்தும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.
விராட் கோலி, அது போன்ற தவறை செய்து ஆட்டம் இழப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் பல போட்டிகளில் இதே போன்ற தவறை செய்து ஆட்டம் இழந்திருக்கிறார். இதன் காரணமாகவே விராட் கோலியின் மீது இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கேப்டன் பொறுப்பில் இருக்கும் வீரர், அடுத்தடுத்த போட்டிகளில் ஒரே மாதிரியான தவறை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற ஜாம்பவான்களும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
தற்போது விராட் கோலி செய்து வரும் தவறை சச்சின் டெண்டுல்கர் உடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில், “2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சச்சின் டெண்டுல்கர் டிரைவ் அடிக்க முயற்சித்தது தொடர்ச்சியாக ஒரே மாதிரி ஆட்டமிழந்தார். அதன் பிறகு அந்த தவறை சரிசெய்து கொண்டு உடனடியாக அந்த தொடர் முழுவதும் டிரைவ் ஆடாமல் வேறு பல ஷாட்டுகளில் அடிக்க முயற்சித்து நன்றாக ரன் குவித்தார். விராட்கோலி செய்யும் தவறு ஒன்று தான். அவர் ஆப்-ஸ்டம்பை சரியாக பார்க்கவில்லை என நினைக்கிறேன்.
இந்த தவறை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். அதற்கு தேவை நிதானம் மட்டுமே. மிகவும் பொறுமையுடன் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ளவேண்டும். நல்ல துவக்கம் கிடைத்த பிறகு, அவசரம் காட்டுகிறார். அதுவும் தவறாக சென்று முடிகிறது. மேலும் விராத் கோலிக்கு பவுன்சர்கள் குறித்து அச்சம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அவர் பவுன்சர்களை இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் நன்றாக எதிர்கொண்டிருக்கிறார். விராட் கோலிக்கு கவர் டிரைவ் பலமான ஷாட் என்பதால் அடிக்கடி அதனை அடிக்க முயற்சித்து வருகிறார். ஸ்டம்பிற்கு வரும் பந்தை மட்டும் அவர் அடிக்க முயற்சித்தால் போதுமானது. வெளியே செல்லும் பந்தை விட்டுவிட வேண்டும் என பலரும் ஆலோசனை கூறி இருக்கின்றனர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்து நிதானத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றார்.