டவுட்டே வேணாம், கோஹ்லி தான் பெஸ்ட் கேப்டன்; புள்ளிவிவரங்களை அடுக்கும் முன்னாள் வீரர்!!

தலைசிறந்த கேப்டன் விராத் கோலி தான் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பல வரலாறுகளைப் படைத்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5வது போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. ஜூன் 2022ஆம் ஆண்டு நடத்தப்பட இருக்கிறது.

 

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் இரண்டாவது முறையாக கைப்பற்றியது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செஞ்சூரியன் மைதானத்தில் இதற்கு முன்னர் எந்த ஒரு ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. அதனை மாற்றியமைத்து கேப்டன் விராட் கோலி புதிய வரலாற்றை எழுதி இருக்கிறார்.

லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பில் இந்திய அணி ஏராளமான வெற்றியை பெற்றிருக்கிறது. துரதிஷ்டவசமாக ஒருமுறைகூட ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை. இதன் காரணமாக டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இரண்டு கேப்டன்கள் வேண்டாம் என்ற காரணத்திற்காக ஒருநாள் போட்டியில் இருந்தும் விராத் கோலியை நீக்கியது பிசிசிஐ.

பிசிசிஐ எடுத்த இந்த நடவடிக்கை விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் முதல் போட்டியை வெற்றி பெற்று வெளிநாட்டு மைதானங்களில் புதிய வரலாறு படைத்திருக்கிறார். இதனை குறிப்பிட்டு பேசிய முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி,

“எந்தவித சந்தேகமும் வேண்டாம். விராட் கோலி தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர். கேப்டன் பொறுப்பில் இருந்து கொண்டு பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் பல வெற்றிகளை குவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி மட்டுமே. இவரை உலகின் தலைசிறந்த கேப்டன் என கூறாமல் எப்படி இருக்க முடியும். என்னை பொருத்தவரை இவர் தான் சமகாலத்தில் தலை சிறந்த கேப்டன். பேட்டிங்கிலும், தென் ஆப்பிரிக்கா தொடரில் நிச்சயம் இழந்த பார்மை மீண்டும் கொண்டுவருவார்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.