இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும்தான் என குறிப்பிட்டு பேசினார் விராட் கோலி.
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஏனெனில் வெளிநாட்டு மைதானங்கள் ஆரம்பத்தில் பந்து வீசுவதற்கு நன்றாக இருக்கும். இரண்டாவது மூன்றாவது நாட்கள் செல்ல செல்ல பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும்.
ஆனாலும் கேப்டன் விராத் கோலியின் இந்த முடிவு மிகச் சரியானது என்று கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்து நிரூபித்தனர். அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினர்.
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி கூறுகையில், “இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான துவக்கம் கிடைத்தது. இதற்காக கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரையும் பாராட்டியே ஆகவேண்டும். இவர்களின் ஆட்டம்தான் இந்திய அணியை துவக்கம் முதல் கடைசி இன்னிங்ஸ் வரை முன்னிலைப்படுத்தியது. அதன்பிறகு வேகப்பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டபடி செயல்பட்டனர். டிரஸ்ஸிங் ரூமில் அவர்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். சில திட்டங்களையும் எடுத்துரைத்தேன். அதன்படி சரியாக செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்து கொடுத்தனர்.
முதல் நாளில் பேட்டிங் செய்வதற்கு எந்த அளவிற்கு கடினமாக இருக்கும் என அனைவரும் அறிவர். குறிப்பாக செஞ்சூரியன் மைதானத்தில் எந்த அளவிற்கு கடினமானதாக இருக்கும் என்று எனக்கும் தெரியும். இதற்கு முன்னர் இங்கே விளையாடி இருக்கிறேன். கடந்த கால நிகழ்வுகள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், இப்போது என்ன செய்யப் போகிறோம் என நான்கு உணர்ந்து கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் பேட்டிங் செய்தனர். அதுதான் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததென நான் பார்க்கிறேன்.” என்றார்.
கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தனர்.