இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இரண்டாவது டி.20 போட்டி நடைபெற்ற அதே தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி, மீண்டும் தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், சீனியர் வீரர்களுக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பும்ராஹ், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆவேஸ் கான், ரவி பிஸ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல் காயம் காரணமாக விலகிய இஷான் கிஷனிற்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம்பெற்றுள்ளார். சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.
அதே போல் இலங்கை அணியும் இந்த போட்டியில் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. பிரவீன் ஜெயவிக்ரமே மற்றும் கமில் மிஸ்ரா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜெனித் லியான்கே மற்றும் ஜெஃப்ரி ஆகியோர் மூன்றாவது போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்சல் பட்டேல், ரவி பிஸ்னோய், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆவேஸ் கான்.
மூன்றாவது டி.20 போட்டிக்கான இலங்கை அணி;
பதும் நிஷான்கா, தனுஷ்கா குணதிலகே, சாரித் அஸ்லன்கா, தினேஷ் சண்டிமால், ஜனித் லியானகே, தசுன் ஷனாகா, சமிகா கருணாரத்னே, துஸ்மந்தா சம்மீரா, ஜெஃப்ரி வாண்டெர்சேய், பினுரா பெர்னாண்டோ, லஹிரு குமாரா.