ஓபனாவே சொல்றேன்… என்னை விட இந்த இந்திய வீரர் தான் தரமான பந்துவீச்சாளர்; மனதார பாராட்டி பேசிய வாசிம் அக்ரம் !!

ஓபனாவே சொல்றேன்… என்னை விட இந்த இந்திய வீரர் தான் தரமான பந்துவீச்சாளர்; மனதார பாராட்டி பேசிய வாசிம் அக்ரம்

பந்துவீச்சில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வரும் பும்ராஹை, முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் அக்ரம் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 30 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் குறிப்பாக இந்திய அணி மற்ற அனைத்து அணிகளையும் விட பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்டு, இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை அசால்டாக வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் போதிய பலத்துடன் இருப்பதால் மட்டுமே நியூசிலாந்து உள்ளிட்ட வலுவான அணியையும் இந்திய அணியால் இலகுவாக வீழ்த்த முடிந்தது என்றால் மிகையல்ல. அதிலும் குறிப்பாக இந்திய அணி பந்துவீச்சில் வலுவானதாக உள்ளது. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜாவும், வேகப்பந்து வீச்சில் பும்ராஹ், ஷமி உள்ளிட்டோரும் அனைத்து அணிகளுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர்.

தனது கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி, அடுத்த போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் அக்ரம், இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான பும்ராஹ்வை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

பும்ராஹ் குறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பும்ராஹ்வின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. முதல் ஓவரில் இருந்தே அவரது பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. இடது கை பேட்ஸ்மேன்கள் பும்ராஹ்வின் பந்துவீச்சை சரியாக கணிக்க கூட முடியாது, அந்த அளவிற்கு பும்ராஹ் பந்துவீச்சில் ஜொலித்து வருகிறார். அதிவேகத்தில் யார் வேண்டுமானாலும்  பந்துவீசலாம், ஆனால் பும்ராஹ்வை போன்று கட்டுப்பாடு மற்றும் துல்லியமாக யாராலும் பந்துவீச முடியாது என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால் என்னால் கூட பும்ராஹ்வை போல் சரியான திசையில், சரியான கட்டுப்பாட்டுடன் பந்துவீச முடியுமா என்று தெரியவில்லை. பந்தை கட்டுப்படுத்துவதில் பும்ராஹ் என்னை விட மிக சிறந்த வீரர் என்பதில் எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்தார்.

 

Mohamed:

This website uses cookies.