நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான 2-வது நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் 2-0 எனக்கைப்பற்றியது.
இந்தியா – நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையில் நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி இன்னிங்சில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டியில் கடந்த 30-ந்தேதி விஜயவாடாவில் தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. கரண் சர்மா, சர்துல் தாகூர், நதீம் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து ‘ஏ’ அணி 211 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீரர் ராவல் 48 ரன்னும், கொலின் முன்றோ 65 ரன்னும், செய்ஃபெர்ட் அவுட்டாகாமல் 44 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அங்கித் பவ்னேயின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 447 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பவ்னே அவுட்டாகாமல் 162 ரன்னும், பன்சால் 46 ரன்னும், ஷ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும், கருண் நாயர் 43 ரன்னும், பார்தீவ் பட்டேல் 65 ரன்னும் எடுத்தனர்.
237 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4-வது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. நேற்றைய ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்த ராவல் 41 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 55 ரன்னுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
முதல் இன்னிங்சில் 162 ரன்கள் எடுத்த பவ்னே
ராவல் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் நிக்கோல்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 210 ரன்னில் ஆல்அவுட் ஆனது நியூசிலாந்து ‘ஏ’ அணி. நிக்கோல்ஸ் 94 ரன்கள் எடுத்தார்.
2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய கரண் சர்மா
210 ரன்னில் சுருண்டதால் இந்தியா ‘ஏ’ அணி இன்னிங்சில் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. 2-வது இன்னிங்சில் கரண் சர்மா 5 விக்கெட்டும், நதீம் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
கரண் சர்மா மற்றும் நதீம் ஆகியோர் இரண்டு போட்டிகளில் 40 விக்கெட்டில் 30 விக்கெட்டுக்களை அறுவடை செய்தது குறிப்பிடத்தக்கது.