இன்றைய ஆட்டத்தை துவக்கிய இந்திய அணியில் பாண்டியா அதிரடியாக ஆட, வெகு வேகமாக அரை சதம் விலாசினார். 10 பவுண்டரிகளுடன் 94 பந்துகளுக்கு 71 ரன் அடித்து அவுட் ஆனார் பாண்டியா. பின்னர் வந்த உமேஷ் யாதவ் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 21 பந்துகளுக்கு 26* ரன் விளாச இந்திய அணி 474 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
நேற்று ஆப்கானிஸ்தானிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் இருவரும் சதம் அடித்தனர். முரளி விஜய் 105(153), தவான் 107 (96) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முரளி விஜய் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அவரை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. அடுத்த 55 ரன்களுக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கே.எல்.ராகுல் 54, புஜாரா 35, ரகானே 10, தினேஷ் கார்த்திக் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி முதல் நாள் முடிவில் 78 ஓவர்கள் விளையாடி 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் யமீன் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். 26 ஓவர்கள் வீசிய அவர் 120 ரன்களும் வாரி வழங்கினார். இவரது ஓவரை தொடக்கத்தில் தவான் வெளுத்து வாங்கினார்.