பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்தியா. ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அரைசதம் அடித்து இந்த வெற்றிக்கு உதவியுள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் பிடிக்க முடியாமல் 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள், முகமது ரிஸ்வான் 49 ரன்கள் அடித்திருந்தனர்.
பும்ரா, சிராஜ், குல்தீப் ஆகியோரின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி கடைசி 36 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய சரிவை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக பும்ரா, சிராஜ், குல்தீப், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினர்.
192 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கி அதிரடியாக ஆரம்பித்தனர். இதில் கில் மற்றும் விராட் கோலி இருவரும் தலா 16 ரன்கள் அடித்து துரதிஷ்டவசமாக அவுட் ஆகினர்.
மறுமுனையில் கடந்த போட்டியில் சதம் விளாசி மிகச் சிறந்த பார்மில் இருந்த ரோகித் சர்மா இம்முறை 35 பந்துகளுக்கு அரைசதம் கடந்தார். அத்துடன் நிற்கவில்லை அதன் பிறகும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி வந்தார்.
உலகக்கோப்பையில் தனது எட்டாவது சதத்தை பதிவு செய்து மீண்டும் ஒரு சாதனையை படைப்பார் என்று எதிர்பார்த்து இருந்தபோது, துரதிஷ்டவசமாக ஷாஹின் சா அப்ரிடி வீசிய பந்தில் அவுட் ஆனார். ரோகித் 63 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 86 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.
களத்தில் நன்றாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் உடன் அடுத்ததாக உள்ளே வந்த கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றனர். இதில் ஷ்ரேயாஸ் ஐயர் உலகக்கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். கேஎல் ராகுல் 19 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் உடன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
30.3 ஓவர்களில் 192 ரன்கள் இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியிடம் இதுவரை தோல்வியை தழுவியது இல்லை என்கிற வரலாறையும் தக்க வைத்தது.
எட்டு முறை இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளுக்கான உலக கோப்பையில் மோதியுள்ளன அதில் 8-0 என இந்திய அணி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.