இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்நிலையில் இரண்டாம் நாளில் போட்டி தொடங்கியது. இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் டேவிட் மலன், ஸ்டோக்ஸுக்கு பதிலாக ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்தனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஈரப்பதமான ஆடுகளம் மற்றும் மேகமூட்டமான வானிலையைக் கருத்தில் கொண்டு பந்து வீச்சை அந்த அணி தேர்வு செய்தது. அது சரிதான் என்பது போல பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். அந்த ஓவரின் 5 வது பந்தில் போல்டானார் முரளி விஜய். அடுத்து ராகுலுடன் இணைந்தார் புஜாரா. ராகுல் 8 ரன்னில் ஆண்டர்சன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆக, கேப்டன் விராத் வந்தார்.
6.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின் ஆட்டம் தொடங்கியதும் கோலியின் தவறான அழைப்பால் புஜாரா ரன் அவுட் ஆனார். அடுத்து ரஹானே வந்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ’ஸ்விங்’கை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். கோலி 24 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்னிலும் தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, ரஹானேவும் அஸ்வினும் ஓரளவு தாக்குப்பிடித்து நின்றனர்.