தனது நீண்டகால தோழியை மணக்க இருக்கிறார் இளம் வீரர் கருண் நாயர். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக தகவல்கள் வருகின்றன. அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கருண் நாயர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய டெஸ்ட் அணியில், 2016-17 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முச்சதம் அடித்து அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் கருண் நாயர். முன்னாள் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் இருக்கு பிறகு சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் கருண் நாயர் பெற்றார்.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் மற்ற இளைஞர்களைப் போலவே தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடி ஒவ்வொரு முறையும் தேர்வுக் குழுவின் முடிவை எதிர்பார்த்து ஏமாந்துபோன ஒருவராக இருந்துள்ளார். அதன்பிறகு பயிற்சியாளர்களின் ஆலோசனை படி, மேலும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். தன்னை நிரூபிக்கும் வண்ணம் முச்சதத்தையும் அடித்து அசத்தினார்.
அப்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஜிங்கிய ரஹானே காயம் காரணமாக வெளியில் இருந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரஹானே குணமடைந்து மீண்டும் அணியில் இணைந்த பிறகு கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், அப்போது இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளின் துவக்க வீரராக இருந்து வரும் ரோகித் சர்மாவிற்கு தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் இடம் அளிக்கப்பட்டு கருண் நாயருக்கு ஏமாற்றமே கிடைத்தது.
அதன் பிறகு தன்னை நிரூபிக்க ஐபிஎல் மற்றும் ரஞ்சி போட்டிகளில் தொடர்ந்து கடுமையாக போராடி வருகிறார் கருண் நாயர். இதற்கிடையில் நேற்று இவருக்கும் இவரது நீண்டகால நெருங்கிய தோழியான சன்யா தங்கரிவாளா விற்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்தது.