டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தேர்வு: இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்!

2-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தேர்வு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் அல்லது சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், கலீல் அகமது

வங்காளதேசம்: லிட்டான்தாஸ், முகமது நைம் அல்லது முகமது மிதுன், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா (கேப்டன்), அபிப் ஹூசைன், மொசாடெக் ஹூசைன், அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான், அல்-அமின் ஹூசைன்

ஷகிப் அல்-ஹசன், தமிம் இக்பால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் வங்காளதேசம் பலவீனமாகி விட்டது என்று வர்ணிக்கப்பட்ட நிலையில் எழுச்சி பெற்ற அந்த அணி முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டது.

இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக விளையாடிய எட்டு 20 ஓவர் ஆட்டங்களிலும் தோற்று இருந்த வங்காளதேசம் முதல் முறையாக வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

தொடக்க ஆட்டத்தை பொறுத்தவரை இந்தியாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. நீண்ட நேரம் களத்தில் நின்ற ஷிகர் தவான் மற்றும் ரிஷாப் பண்டுவின் பேட்டிங் மந்தமாக காணப்பட்டது. இதனால் தான் 150 ரன்களை கூட தொட முடியாமல் போனது.

பந்து வீச்சில் 17 ஓவர்கள் வரை இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. முஷ்பிகுர் ரஹிமுக்கு 38 ரன்னில் நழுவ விட்ட கேட்ச்சும், அதற்கு முன்பாக எல்.பி.டபிள்யூ. அப்பீலின் போது டி.ஆர்.எஸ். கேட்காததும் தோல்விக்கு காரணியாக அமைந்தது. ரிஷாப் பண்டுவின் விக்கெட் கீப்பிங் பணி தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வந்தாலும், அவரை கழற்றி விட வாய்ப்பில்லை. கடந்த ஆட்டத்தில் அறிமுக வீராக இறங்கிய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஜொலிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Shafiul Islam of Bangladesh celebrates the wicket of Rohit Sharma (Captain) of India during the 1st T20I match between India and Bangladesh held at the Arun Jaitley Stadium, Delhi on the 3rd November 2019.
Photo by Deepak Malik / Sportzpics for BCCI

அதே சமயம் 4 ஓவர்களில் 37 ரன்களை வாரி வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவுக்கு பதலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்படலாம். மொத்தத்தில் வங்காளதேசத்துக்கு சுடச்சுட பதிலடி கொடுக்க ஒருங்கிணைந்த ஆட்டம் அவசியமாகும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய வீரர்கள் முழுவீச்சுடன் வரிந்து கட்டி நிற்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

வீரர்களின் போராட்டம், ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கு தடை என்று பல சிக்கல்களை கடந்து இந்தியாவுக்கு பயணித்த வங்காளதேச அணிக்கு முதலாவது வெற்றி உற்சாகமும், நம்பிக்கையும் அளித்துள்ளது. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்கள் விளாசி ஹீரோவாக மின்னினார். இந்த ஆட்டத்திலும் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Sathish Kumar:

This website uses cookies.