இந்திய அணியின் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்து தனித்தனியாக அணிகளுக்கு கேப்டன்கள் நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பட்டம் வெல்லும் என கருதப்பட்ட இந்தியா அரையிறுதிச் சுற்றோடு வெளியேறியது.
அணியின் தொடக்க வரிசை வீரர்கள் மூன்று பேர் வெறும் 1 ரன்னோடு அவுட்டானது தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.இந்நிலையில் முக்கிய வீரர்களான கோலி-ரோஹித் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில் அணியின் உலகக் கோப்பை செயல்பாடு தொடர்பாக கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ சிஓஏ தீர்மானித்துள்ளது. மேலும் அணித் தேர்வு தொடர்பாக தேர்வுக் குழுவிடமும் ஆலோசனை செய்யப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது-
ஒரு போட்டி முடிந்த பின்னர் அடுத்த போட்டிக்கு சிறந்த அணிகள் தயாராவது வழக்கம். அடுத்த பெரிய போட்டிக்கு தயாராகும் வகையில் குறுகிய ஓவர்கள் அணிக்கு ரோஹித்தையும், டெஸ்ட் அணிக்கு கோலியையும் கேப்டனாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது
50 ஓவர் ஆட்டங்களுக்கு ரோஹித் கேப்டன் பொறுப்பேற்பது இதுவே சரியான தருணமாகும். அடுத்து நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு கவனம் செலுத்த வேண்டும். அணியை முற்றிலும் புதுமையாக கட்டமைக்க வேண்டும் இதற்கு ரோஹித் சரியான நபராக இருப்பார். அல்லது டி20 தொடர்களுக்கு ஸ்ரேயஸ் ஐயர் அல்லது ஹர்திக் பாண்டியா போன்ற இளம் வீரர்களை நியமிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
எனினும் இருவரிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது கவலை தருகிறது. அவ்வாறு இருந்தால் இது இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சிஓஏ கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும்.
முன்பு ஹைதராபாதில் நடைபெற்ற சிஓஏ-வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ஐபிஎல் போட்டியின் போது வீரர்களுக்கு ஓய்வு தரும் விவகாரத்தில் கோலி-ரோஹித் இடையே இருந்த வேறுபாடு தெரிந்தது.