அடேங்கப்பா…. பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆப்பு வைத்த இந்திய வீரர்கள்; தொடரை இழந்தது ஆஸ்திரேலியா
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 104 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும், கே.எல் ராகுல் 52 ரன்களும், இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 399 ரன்கள் குவித்தது.
இதன்பின் 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களான மேத்யூ ஷார்ட் (9) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (0) ஆகியோர், பிரசீத் கிருஷ்ணா வந்த வேகத்தில் வெளியேற்றி அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் நீண்ட நேரம் போராடி 53 ரன்கள் எடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்கவில்லை. போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர் 33 ஓவர்களாக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும் 317ஆக குறைக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அஸ்வின், ஜடேஜா மற்றும் பிரசீத் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பின்வரிசையில் களமிறங்கிய சியன் அபாட் சிறிது நேரம் தாக்குபிடித்து 54 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் 28.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.