ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு இடம் கொடுக்காததற்கான காரணம் என்ன என்பதை பிசிசிஐ தலைவர் கங்குலி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, ரோஹித் சர்மாவிற்கு பெயர் இல்லாததும், கே.எல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதும் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கோஹ்லியின் சதியால் தான் ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற அளவிற்கு ரசிகர்கள் பலர் கடும் காட்டமாகவே விமர்சித்து வந்தனர், இதன் காரணமாகவும் விராட் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்தியா திரும்ப வேண்டியுள்ளதாலும் ரோஹித் சர்மா டெஸ்ட் தொடருக்கான அணியில் மட்டும் கடந்த சில தினங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். இருந்தாலும் ரோஹித் சர்மா நீக்கம் குறித்தான சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்தநிலையில், ரோஹித் சர்மா நீக்கம் குறித்தான அனைத்து கேள்விகளுக்கும் பிசிசிஐ தலைவரான கங்குலி கடும் காட்டமாகவே பதிலளித்துள்ளார்.
இது குறித்து கங்குலி பேசுகையில், “வீரர்களின் காயம் குறித்த விவரங்கள் பிசிசிஐக்கும், பிசியோவுக்கும், NCAவுக்கும் மட்டுமே தெரியும். பிசிசிஐ எப்படி இயங்குகிறது என யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காயம் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரின்போது இந்திய பிசியோ மற்றும் பயிற்சியாளர்கள் துபாயில் தான் தங்கியிருந்தனர். சாஹா டெஸ்ட் தொடரில் தான் விளையாட உள்ளார். அதற்குள் அவர் முழு உடற்தகுதி பெற்றுவிடுவார்” என்றார்.
மேலும் பேசிய கங்குலி, ரோஹித் சர்மா முழுமையான உடற்தகுதியுடன் இல்லை, 70சதவீதம் மட்டுமே பிட்டாக உள்ளார், இதன் காரணமாகவே ரோஹித் சர்மாவுக்கு ஒருநாள் மற்றும் டி.20 தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.