பங்களாதேஷுக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியின் மூலம், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, நூறாவது டி-20 போட்டியில் பங்கேற்கிறார்.
இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் இன்றைய போட்டியில் கட்டாயமாக வெற்றிப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது.
முதல் போட்டியில், இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. ஷிகர் தவான், ரிஷாப் பன்ட் ஆகியோர் மெதுவாகவே ஆடினர். இதனால் இன்றையப் போட்டியில் சில மாற்றங்கள் இருக்கலாம். பீல்டிங்கும், கடந்த போட்டியில் சிறப்பாக இல்லை. முஷ்பிகும் ரஹிம் கொடுத்த எளிதான கேட்சை விட்டதால், அவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பந்துவீச்சில், கலீல் அகமது ரன்களை வாரி வழங்கியதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்படலாம்.
பங்களாதேஷ் அணியில் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் இல்லாத குறை அவர்களுக்கு எந்த பின்னடைவையும் தரவில்லை. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இன்றையப் போட்டியிலும் அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இது 100-வது சர்வதேச டி-20 போட்டி. நூறாவது டி-20 போட்டியில் ஆடும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார் ரோகித். இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
Photo by Deepak Malik / Sportzpics for BCCI
குஜராத்தில், ’மகா’ புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. இரவிலும் மழை பெய்துள்ளது. இன்றும் மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் அல்லது சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், கலீல் அகமது அல்லது ஷர்துல் தாகூர்.