தல தோனியின் சாதனையை தகர்த்தெறிந்தார் ரிஷப் பண்ட்
விண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய டி.20 போட்டியின் மூலம் தோனியின் சாதனை ஒன்றைய ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கோண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் மூன்றாவது டி20 போட்டி நேற்று கயானா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 27 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்களை இழந்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இந்திய கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 65 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒரு டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பராக தோனி ஒரு போட்டியில் அடித்திருந்த 56 ரன்களை கடந்துள்ளார். அத்துடன் 22 வயது முடிவதற்குள் டி20 போட்டியில் 2 அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
ரிஷப் பண்ட்டிற்கு விராட் கோஹ்லி பாராட்டு
ரிஷப் குறித்து பேசிய கேப்டன் கோலி, ரிஷப் பண்ட்டைத்தான் இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கிறோம். ரிஷப் பண்ட் மிகச்சிறந்த திறமைசாலி. எனவே அவருக்கு அழுத்தம் கொடுக்காமல், அவருக்கு தேவையான ஸ்பேஸை கொடுக்க வேண்டும் என்று கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தூணாக இருந்த தோனியின் இடத்தை நிரப்ப வேண்டிய கடினமான கடமை ரிஷப்புக்கு உள்ளது. தோனியின் இடத்தை அவ்வளவு எளிதாக நிரப்பமுடியாது என்பதால், எடுத்த எடுப்பிலேயே ரிஷப்பிடமிருந்து பெரிதாக எதிர்பார்த்து அவருக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது. அதைத்தான் கோலி தெரிவித்துள்ளார்.