இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.
தொடர்ச்சியாக ஆறு டி 20 தொடர்களை கைப்பற்றி இந்தியா அசத்தல்
புதுடெல்லி:
இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் கோலி தலைமையில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதற்கு முன்னதாக, அயர்லாந்துடன் 2-0 என்ற கணக்கிலும், இலங்கை – வங்காள தேசத்துடன் முத்தரப்பு தொடரிலும், தென் ஆப்ரிக்காவுடன் 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடன் 3-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்துடன் 2-1 என்ற கணக்கிலும் டி-20 தொடரை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோப்பையை வென்ற கேப்டன் கோலி கூறியதாவது:
பவுலர்கள் ஆட்டத்தைத் திருப்பியது தனித்துவமானது. இங்கிலாந்து 225-230 ரன்கள் எடுப்பார்கள் என்றே நினைத்தோம். பவுலர்கள் காட்டிய கேரக்டர் எங்களைப் பெருமையடையச் செய்கிறது, ஒரு கேப்டனாக அது மகிழ்ச்சியளிக்கிறது.
விக்கெட் வீழ்த்தும் அந்தப் பந்துகளை வீசும் தரம் நம்மிடம் உள்ளது. அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். பாண்டியா உள்ளபடியே நல்ல ஆல்ரவுண்ட் கிர்க்கெட்டர். தன்னம்பிக்கை மிக்கவர், அதுவும் அவர் அந்த விக்கெட்டுகளை வீழ்த்திய விதம் இளம் வீச்சாளர்களிடம் நாங்கள் எதிர்நோக்குவதாகும்.
பிறகு பேட்டிங்கிலு விளாசினார், ரோஹித் நிச்சயம் சிறப்புதான், ஆனால் ஹர்திக் பாண்டியா ஆட்டம் தனித்து நிற்கிறது.
ஆட்டக்களம் மட்டையாளர்களுக்கானது, நாங்கள் உண்மையில் பேட்டிங்கை மகிழ்ந்தோம். ஆனால் பவுலர்களுக்கு இது கொடூரமான நாள்.
தொடர்ந்து பேட்டிங் வரிசையிலும் பந்து வீச்சிலும் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்வோம். வீரர்களும் இதனை வாய்ப்பாகவே கருதுகின்றனர். தொடரை வென்று அபாரமாகத் தொடங்கியுள்ளோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி