123 ரன்கள் அடிக்க உதவியது இந்தியன் பவுலர்ஸ் தான்; போட்டிக்கு முன்னர் நடந்த சுவாரஷ்யத்தை சொன்ன கேஎல் ராகுல்!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உண்மையில் வேற லெவல் என புகழ்ந்து தள்ளியிருக்கிறார் கே எல் ராகுல்.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மைதானங்களில் இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்று வரலாறு படைத்திருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்காவிலும் இத்தகைய வரலாற்றுச் சாதனை தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பயிற்சியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தனக்கு பந்துவீசிய விதத்தை குறிப்பிட்டு புகழாரம் சூட்டியிருக்கிறார் கேஎல் ராகுல். முதல் இன்னிங்சில் சதம் அடித்து இந்திய அணியை முன்னிலைப் படுத்தினார். சதம் அடிப்பதற்கு முக்கியகாரணம், பயிற்சியின்போது இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விதம் தான் என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

“நான் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தில் என்னை அச்சுறுத்தினர். ஒருசில பந்துகள் நான் எதிர் கொள்வதற்கு மிகவும் பயந்தேன். எளிதில் காயம் ஏற்படக்கூடிய அளவிற்கு அவர்களின் வேகம் இருந்தது. வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி சமீபகாலமாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பலரும் காரணமாக குறிப்பிட்டனர். அது உண்மை என்று அப்போது உணர்ந்து கொண்டேன். அடுத்த கட்டத்திற்கு அவர்கள் எடுத்துச் செல்கின்றனர்.” என புகழாரம் சூட்டினார்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் கேஎல் ராகுல் 123 ரன்கள் அடித்திருந்தார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் தனது 7வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். இவர் அடித்த ஏழு சதங்களில் ஆறு சதங்கள் வெளிநாட்டு மைதானங்களில் அடிக்கப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தற்போது தென் ஆப்பிரிக்கா ஆகிய மைதானங்களில் கேஎல் ராகுல் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.