மீண்டும் பயிற்சியை துவங்கும் இந்திய வீரர்கள்; பயிற்சிக்கான மூன்று இடங்கள் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர்களின் பயிற்சிக்காக மூன்று மைதானங்களை இறுதி செய்துள்ள பி.சி.சி.ஐ., அதில் ஒரு மைதானத்தை தேர்வு செய்து விரைவில் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவின் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக எந்த போட்டியும் நடைபெறவில்லை. பல தடைகளை கடந்து இங்கிலாந்து – விண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்களையும் களத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தநிலையில், பிசிசிஐ., நிர்வாகிகள் கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல்.யை போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் மருத்துவ வசதி உள்பட பல்வேறு வசதிகள் மற்றும் ஏற்கனவே போட்டி நடத்திய அனுபவம் ஆகியவை காரணமாக, அங்கு போட்டியை நடத்த பெரும்பாலான நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதேபோல இந்திய வீரர்களின் பயிற்சி முகாமுக்கு 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. துபாய், தர்மசாலா, அகமதாபாத் ஆகிய 3 இடங்கள் இந்திய வீரர்களின் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஏதாவது ஒரு இடத்தில் பயிற்சி முகாம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.