ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை விரைவில் அறிவிக்கும் பிசிசிஐ என அதிகாரிகள் விளக்கம்.
ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணி மோதவிருக்கிறது. 3 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடருக்கான வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் நிறைவு பெற்றவுடன் தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் அணிகளுடன் இந்தியா மோதவிருக்கிறது. அதை தொடர்ந்து ஜனவரி மாதம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணியுடன் இந்திய அணி மோதுவதாக அட்டவணைகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஐசிசி விதிமுறையை மீறி, ஜிம்பாப்வே கிரிக்கெட் குழுமத்தில் அரசியல் ஈடுபாடுகள் இருந்ததன் காரணமாக ஐசிசி நிர்வாகம் உடனடி நடவடிக்கையின் அடிப்படையில், ஜிம்பாப்வே அணியை ஐசிசி உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. மேலும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுக்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் இனி நிறுத்தப்படும் என்பதையும் தெரிவித்தது.
இதனால் ஜிம்பாப்வே அணி மற்ற அணிகளுடன் மோதவிருக்கும் அனைத்து போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஜனவரி மாதம் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதவிருக்கும் தொடரும் தற்போது தடைபட்டுள்ளது.
இதற்கான மாற்று ஏற்பாடுகளை அக்டோபர் மாதத்திற்கு மேல் பிசிசிஐ வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்குள் நல்லொழுக்கத்தை ஜிம்பாப்வே நிரூபித்து மீண்டும் ஐசிசி உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றால், தொடரில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதும் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் ஐசிசி உறுப்பினர்கள் கூட்டத்தில் வருடாந்திர அட்டவணையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமா? இல்லை, மாற்றங்கள் இல்லாமல் ஜிம்பாப்வே அணியுடன் தொடர் நடக்குமா? என்பது கூறப்படும்.