“நான் டாக்டரோ என்ஜினீயரோ ஆகிருக்கலாம், ஆனால் நான் கிரிக்கெட்டை தேர்வு செய்ய காரணம்..” – ஜஸ்பிரித் பும்ரா ஓபன் டாக்!

பல விளையாட்டுகளை நான் விளையாடி இருந்தாலும், கிரிக்கெட்டை தேர்வு செய்ததற்கு இதுதான் முக்கிய காரணம் என்று சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் பும்ரா.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சிற்கு மணிமாகுடமாக இருப்பவர் ஜஸ்பிரீத் பும்ரா. இவரது நேர்த்தியான யார்க்கர் மற்றும் துல்லியமான பந்துவீச்சு இரண்டும் எதிரணிகளை பல்வேறு போட்டிகளில் திணறடித்து இருக்கிறது. டெஸ்ட் போட்டி மற்றும் லிமிடெட் ஓவர் போட்டிகள் என இரண்டிலும் இந்திய அணிக்காக முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இவரது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சன் பலரையும் கவர்ந்திருக்கிறது. குறுகிய தூரம் ஓடிவந்து அதிக வேகத்தில் பந்துவீசக்கூடிய வித்தியாசமான வீரராகவும் இவர் இருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அறிமுகம் ஆகிய பும்ரா, அப்போது முதல் தொடர்ந்து இன்றியமையாத பங்களிப்பை கொடுத்து வருகிறார். இவரைப் பற்றிய பேட்டிகள் பெரிதளவில் வெளியில் வந்ததில்லை. ஆகையால் ரசிகர்களுக்கும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருந்தது என்றும் தெரியவில்லை. இவை அனைத்தையும் தெரியப்படுத்தும் விதமாக சமீபத்திய பேட்டியில் பும்ரா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்,

“நான் கிரிக்கெட் மட்டுமல்லாது பல விளையாட்டுகளில் பங்கேற்று அதில் நன்றாகவும் விளையாடி வந்திருக்கிறேன். ஆனால் என்மனதிற்கு நெருக்கமாக இருந்தது கிரிக்கெட் மட்டுமே. நான் கிரிக்கெட்டில் தான் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று எனது ஆரம்ப கட்டத்திலேயே தெளிவாக இருந்தேன்.” என்றார்.

கிரிக்கெட்டை தனது முழு நேர வேலையாக தேர்வு செய்த பிறகு குடும்பம் எவ்வாறு ஆதரவு கொடுத்தது என்று பேசிய அவர், “ஆரம்பத்தில் நான் கிரிக்கெட்டை எனது முழு நேர வேலையாக தேர்வு செய்தது பற்றி எனது குடும்பத்திற்கு எதுவும் புரியவில்லை. மிகவும் குழப்பமாக இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் படிப்பு மற்றும் படிப்பு சார்ந்த வேலை என்று எப்போதும் இருப்பவர்கள். ஆனால் எனது அம்மா எப்போதும் ஒன்றே மற்றும் கூறிக்கொண்டே இருப்பார். “உனக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டும் செய்.” என்பார். “இதைத்தான் நீ செய்ய வேண்டும்.” என்று ஒருபோதும் என்னை அவர்கள் வற்புறுத்தியது இல்லை. பாதுகாப்பில்லாத ஒரு வேலையை தேர்வு செய்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருந்தார்கள்.

என்னை டாக்டர் அல்லது என்ஜினியர் இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதும் இல்லை. ஆரம்பகட்டம் சற்று கடினமாகத்தான் இருந்தது. ஏனெனில் எனது குடும்பத்திற்கு நான் என்ன செய்கிறேன் என்றே புரியவில்லை. ஆகையால் என் மீது அவர்களுக்கு நம்பிக்கையும் குறைவாகவே இருந்தது. அந்த நம்பிக்கை இல்லாதத்தனம் தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. அவர்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்தபோது எனக்குள் ஒரு கோபம் இருந்து கொண்டே இருந்தது. கண்டிப்பாக கிரிக்கெட்டில் நான் யார் என்பதை இந்த உலகிற்கே காட்டுவேன் என எனக்குள்ளே சொல்லிக் கொண்டே இருப்பேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.