சமூக ஊடகங்களில் இதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசத்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் போட்டியை புறக்கணித்தால் சேப்பாக்கம் மைதானம் காலியாக இருக்கும் என்றும், தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கு காரணம் தெரிய வந்தால் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் இப்பிரச்சனை சின்ன தியாகத்தால் சென்று சேர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
ஒரு ஐம்பதாயிரம் பேர் செய்யக்கூடிய இந்த தியாகத்தால் ஏழு கோடி பேர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், இது மொழிப்பிரச்சனை அல்ல வாழ்வுப் பிரச்சனை என்றும், விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழகத்தில் மக்கள் உணர்வோடு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் சொந்த பணத்தில் டிக்கெட்டை பெற்று மைதானத்திற்குள் சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வேல்முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தில் மக்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆட்சியாளர்கள் திசைதிருப்ப கிரிக்கெட் போட்டிகளை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இத்தகைய சூழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும் இரையாகிவிடக் கூடாது என வேல்முருகன் கூறியுள்ளார்.
சேப்பாக்கத்தில் வரும் 10ஆம் தேதி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். அதேநேரம் கிரிக்கெட் விளையாட்டிற்கோ, அதன் ரசிகர்களுக்கோ, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கோ தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். தங்களின் நியாயமான கோரிக்கை புறந்தள்ளப்பட்டால், கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.