ஐபிஎல் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் நடத்தப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும். சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்கும்.
மேலும், டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள். அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்த தொடருக்கான ஆட்சி மன்ற குழு இன்று முடிவு செய்தது.
‘‘ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த ஏலம் பாரம்பரியமான பெங்களூருவில் இருந்து இந்த முறை கொல்கத்தாவுக்கு செல்கிறது’’ என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,
கடந்த ஐபிஎல் தொடரில் நடுவர்கள் நோ-பால்களை கவனிக்காமல் விட்டு விட்டது பெரும் சர்ச்சைகளை உருவாக்க 2020 ஐபிஎல் தொடரில் அம்மாதிரி தவறுகள் நடக்காமல் இருக்க நோ-பால்களைக் கவனிக்க தனித்த டிவி நடுவர் ஒருவரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இந்த டிவி நடுவர் வேறு, மற்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யும் டிவி நடுவர்கள் வேறு என்ற முறையில் ஐபிஎல் மேலும் ஒரு புதுமையைப் புகுத்தவுள்ளது.
இந்திய அணியின் சிறந்த நடப்பு கேப்டன் விராட் கோலி, முன்னாள் சிறந்த கேப்டன் தோனி ஆகிய இருவருமே ஐபிஎல் கிரிக்கெட்டில் நோ-பால் விவகாரத்தில் தங்கள் கோபாவேசங்களை களத்திலேயே காட்டியது கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் நடந்தேறியது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபி ஆட்டத்தில் கடைசி பந்தை லஷித் மலிங்கா நோ-பாலாக வீசியது நடுவரால் பார்க்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சைக்குள்ளானது. கோலி இதனை “முட்டாள்தனமானது” என்று கடுமையாகச் சாடினார். மலிங்காவின் அந்தப் பந்து நோ-பால் என்று ஆகியிருந்தால் ஷிவம் துபே சிங்கிள் எடுக்க ஏ.பி.டிவில்லியர்ஸ் ஃப்ரீ ஹிட்டில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருந்தது, காரணம் டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இதனையடுத்து 2020 ஐபிஎல் கிரிக்கெட்டில் நோ-பால்களை கண்காணிக்க தனித்த டிவி நடுவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.