அடுத்த வருட ஐபிஎல் தொடரில் புதிதாக இணையவுள்ள இரண்டு அணிகளில் ஒன்றான அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்கள் அணி சார்பில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரத்தை நேற்று அறிவித்தது.
அதன்படி, அகமதாபாத் அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவையும் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானையும் தலா 15 கோடி ரூபாய்க்கும் பேட்டர் ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாக அந்த அணியின் இயக்குநர் விக்ரம் சோலங்கி தெரிவித்துள்ளார்.
கேஎல் ராகுலை 17 கோடி ரூபாய்க்கும் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிசை 9.2 கோடி ரூபாய்க்கும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்ணோயை 4 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாக லக்னோ அணி தெரிவித்துள்ளது. மற்ற வீரர்கள் வரும் 12 மற்றும் 13ஆம் தேதியில் பெங்களூருவில் நடக்கம் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இரு அணிகளும் தெரிவித்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட உள்ளார். அகமதாபாத் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.