ருத்துராஜ் கெய்க்வாட் இல்லை, சென்னை அணியின் வெற்றி இந்த இரண்டு பேர் கையில் தான் உள்ளது ; முன்னாள் வீரர் சொல்கிறார்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இரண்டு வீரர்களும் முக்கிய பங்காற்றுவார்கள் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.


கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடத்திற்கான தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து, புதிய அணியை கட்டமைத்துள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட முக்காவாசி வீரர்களை ஏற்கனவே சென்னை அணியில் விளையாடிய வீரர்களாக பார்த்து அணியில் இணைத்துள்ளது, சென்னை அணி தவறவிட்ட வீரர்கள் என்று பார்த்தால் அது ஷர்துல் தாகூர் மற்றும் டுபிளசிஸ் ஆகிய இரண்டு வீரர்கள் என்றே கூறலாம், மற்றபடி சென்னை அணி அனைத்து வீரர்களையுமே அணியில் இணைத்துள்ளது. மேலும் விடுபட்ட வீரர்களுக்கு பதில் திறமையான மற்றும் தகுதி வாய்ந்த வீரர்களை சென்னை அணி தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை அணி தான் தேர்ந்தெடுத்த வீரர்களை வைத்து எப்படி அணியை கட்டமைக்கும் என்று ரசிகர்கள் உட்பட அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சென்னை அணி யாரை?,எந்த இடத்தில்?,எப்படி? பயன்படுத்தும் என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிராட் ஹாக் பேசுகையில், சென்னை அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள அம்பத்தி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இரண்டு வீரர்களும் சென்னை அணிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக களம் இறங்குவார்கள், தற்போதைய சென்னை அணிக்கு இந்த இரண்டு வீரர்களுமே முக்கிய வீரர்கள் என்று கூறலாம், அதேபோன்று டுபிளசிஸ் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரராக நியூசிலாந்து அணியின் இடதுகை பேட்ஸ்மேன் டிவான் கான்வே விளையாடுவார் என்று பேசிய பிராட் ஹாக், சென்னை அணி சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது என்றும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.