சுரேஷ் ரெய்னாவை ஒரு அணி கூட ஏலத்தில் எடுக்காதது ஏன்…? விளக்கம் கொடுத்த சங்ககாரா !!

இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை ஒரு அணி கூட ஏலத்தில் எடுக்காதது குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார சங்ககாரா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

15வது சீசனான இந்த தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. அதே போல் இந்த தொடருக்கான ஏலம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் வைத்து நடத்தப்பட்டது.

மெகா ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் போன்ற இளம் வீரர்கள் பலர் பெரிய தொகைக்கு ஏலம் போனர், ஆனால் ஐபிஎல் தொடரின் அடையாளமாக திகழும் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவை ஒரு அணி கூட அவரது அடிப்படை விலைக்கு கூட ஏலத்தில் எடுக்கவில்லை.

மிஸ்டர் ஐபிஎல் என்ற பெயர் வைத்து அழைக்கப்படும் அளவிற்கு ஐபிஎல் தொடரின் சிறந்த வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவை, சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார சங்ககாரா ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை விலை போகாதது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சங்ககாரா பேசுகையில், “இளம் வீரர்கள் புதிய தரங்களை நிர்ணயித்துள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்தையே மாற்றியுள்ளனர். ரெய்னா ஐபிஎல்லின் லெஜண்ட் வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பல சீசன்களாக மிகச்சிறப்பாக விளையாடிருக்கிறார். அவர் மிகச்சிறந்த வீரராக இருந்தாலும், இப்போதைய பயிற்சியாளர்கள், அனலிஸ்ட்டுகள், அணி உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் வீரராக அவர் இல்லை” என்று தெரிவித்தார்.

சுரேஷ் ரெய்னா இந்த வருட ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளராக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.