பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
2022 ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்து விட்டதால் ,ஒவ்வொரு அணியும் தனது அணியை வலுவாக கட்டமைக்க பல முயற்சிகளை செய்து வருகிறது.
இதில் கேப்டன் இல்லாமல் தவித்து வந்த ஒரு சில அணிகள் தங்களது கேப்டன் யார் என்பதை அறிவித்துவிட்ட நிலையில்,பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டும் கடைசிவரை யாரை கேப்டனாக நியமிக்க போகிறது என்பது தெரியாமல் இருந்தது.
பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் 2022 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக நியமிப்பதற்காகவே டெல்லி கேப்பிடல் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானை பஞ்சாப் அணியில் இணைத்துள்ளது என்று தெரிவித்து வந்தனர். இதனால் பஞ்சாப் அணி, ஷிகர் தவான் அல்லது மயங்க் அகர்வால் ஆகிய இரண்டு வீரர்களில் ஒருவரை தான் கேப்டனாக நியமிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
அதேபோன்று, 2022 ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் கேப்டனாக செயல்படுவார் என்று இன்று(28/02/2022) காலை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டது.
பஞ்சாப் அணியில் நீண்டகாலமாக விளையாடிய வீரர்கள் வரிசையில் இருந்த கேஎல் ராகுல் 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இல்லை என்பதால் பஞ்சாப் அணிக்காக அதிகமான போட்டிகளில் விளையாடிய மயங்க் அகர்வால் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட மயங்க் அகர்வாலை குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அணில் கும்ளே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர்,“2018 ஆம் ஆண்டு முதல் பஞ்சாபின் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் மயங்க் அகர்வால், கடந்த இரண்டு வருடங்களாக பஞ்சாப் அணியில் முக்கிய முடிவு எடுக்கும் இடத்திலும் இருக்கிறார், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி திறமையான இளம் வீரர்களைக் கொண்டு அனுபவ வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த அணியாக உள்ளது, இதனை மயங்க் அகர்வால் சிறப்பாக வழிநடத்துவார், தற்பொழுது நாங்கள் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்காலத்தில் சிறந்த அணியாக கட்டமைப்பதற்கு முயற்சி செய்கிறோம். மயங்க் அகர்வால் ஒரு சிறந்த கேப்டன் அவர் திறமையான ஒரு வீரர். அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என நம்புகிறோம்” என்று அனில் கும்ப்ளே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.