15வது ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளதாக வாய்ப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடத்திற்கான தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து, புதிய அணியை கட்டமைத்துள்ளது.
இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை தொடங்கும் என அறிவித்தார். மேலும் அவர், மும்பை, நவி மும்பை, புனே ஆகிய 3 இடங்களில் உள்ள மைதானங்களில் லீக் ஆட்டங்கள் நடைபெறுவதாகத் தெரிவித்தார். பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே போல் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் 40 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருக்கும் நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், முழு அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.