முதல் பந்தில் கேமிரான் க்ரீன், அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்… பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த அஸ்வின்; ராஜஸ்தான் அணிக்கு எளிய இலக்கு
17வது ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் இடையேயான போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் கேப்டனும் துவக்க வீரருமான 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த போது ரோவ்மன் பவலின் அசாத்தியமான கேட்ச்சால் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான விராட் கோலி 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
அதிரடி ஆட்டக்காரர்களான கேமிரான் க்ரீன் (27) மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (0) ஆகியோரை ரவிச்சந்திர அஸ்வின் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராஜத் படித்தர் 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
பெங்களூர் அணியின் கடைசி நம்பிக்கையாக திகழ்ந்த லம்ரோர் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன் குவிக்கவில்லை, இதன் மூலம் போட்டியின் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஆவேஸ் கான் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சந்தீப் சர்மாவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.