கிங்காக மாறிய சிமர்ஜித் சிங்… பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய சென்னை வீரர்கள்; 141 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் !!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 61வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அந்த அணியின் அதிரடி துவக்க வீரர்களான பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த போட்டியில் பெரிய துவக்கத்தை கொடுக்கவில்லை. ஜாஸ் பட்லர் 25 பந்துகளில் 21 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 24 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். சிமர்ஜித் சிங் ராஜஸ்தான் அணியின் இரண்டு துவக்க வீரர்களின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 15 ரன்கள் எடுத்த போது சிம்ரஜித் சிங்கின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
தான் கொடுத்த இரண்டு கேட்ச்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கோட்டைவிடவே, இதை சரியாக பயன்படுத்தி கொண்ட ரியான் பிராக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 47* ரன்களும், துருவ் ஜூரல் 28 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 141 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சிம்ரஜித் சிங் 3 விக்கெட்டுகளையும், துசார் தேஸ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.