“Hats Off”… இரண்டு கேட்ச்…. ஒரு ரன் அவுட்டில் மாறிய போட்டி… வெறித்தனமாக போராடி சென்னையை வீழ்த்தியது பெங்களூர் அணி !!

“Hats Off”… இரண்டு கேட்ச்…. ஒரு ரன் அவுட்டில் மாறிய போட்டி… வெறித்தனமாக போராடி சென்னையை வீழ்த்தியது பெங்களூர் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றி பெற்ற பெங்களூர் அணி கெத்தாக ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடருக்கான நான்காவது அணியை தீர்மானிக்கும் மிக முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும்  மோதின.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டூபிளசிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும், ராஜத் படித்தர் 41 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி, 201 ரன்கள் எடுத்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் கேப்டனும், மிக முக்கியமான வீரருமான ருத்துராஜ் கெய்க்வாட் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததார். அடுத்ததாக களத்திற்கு வந்த டேரியல் மிட்செல் 4 ரன்னில் வெளியேறினார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா – ரஹானே ஜோடி, பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தது. ரஹானே 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் களமிறங்கிய சிவம் துபே பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியதோடு, மறுமுனையில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்து கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா ரன் அவுட்டாவதற்கும் காரணமாகவும் திகழ்ந்தார். 15 பந்துகளை எதிர்கொண்ட சிவம் துபே வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு விக்கெட்டையும் இழந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த சாட்னர் 3 ரன்கள் எடுத்திருந்த போது டூபிளசிஸியின் அசாத்திய கேட்ச்சால் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா – தோனி  ஜோடி போட்டியின் தன்மையை உணர்ந்து பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. வெற்றிபெற முடியாவிட்டாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு தேவையான 201 ரன்களை எட்டிவிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்திய இந்த கூட்டணி அதற்கு ஏற்றார் போல் ரன்னும் சேர்த்தது. இதன் மூலம் கடைசி ஒரு ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்ற நிலையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டியது.

யஸ் தயால் வீசிய போட்டியின் கடைசி ஓவரை எதிர்கொண்ட தல தோனி முதல் பந்தில் இமாலய சிக்ஸர் அடித்தாலும், இரண்டாவது பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த ஷர்துல் தாகூரால் முதல் பந்திலேயே ஜடேஜாவிற்கு ஸ்ட்ரைக் கொடுக்க முடியாததாலும், யஸ் தயாலின் சிறப்பான பந்துவீச்சாலும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்ததோடு, 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கெத்தாக ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

Mohamed:

This website uses cookies.