இன்னும் சில தினங்களில் இங்கிலாந்துக்கு எதிரான முதல்கட்டமாக 3 டி20 போட்டிகள் நடக்கவுள்ள இதில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுவதால் யாரை அணியில் இணைப்பது யாரை வெளியில் உட்காரவைப்பது என்பதை முடிவு செய்வதே பெரிய காரியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிராக 2-0 என்று வெற்றி பெற்றதையடுத்து தனக்கு இந்த திறமை வாய்ந்த அணியிலிருந்து 11 ஆடும் வீரர்களைத் தேர்வு செய்வது ஆரோக்கியமான தலைவலி அளிப்பதாகவும் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
ஏதேனும் ஒரு ஐபிஎல் அணியுடன் இந்திய அணி ஆடியிருந்தால் கூட கொஞ்சம் மேட்ச் பயிற்சி கிடைத்திருக்கும். ஆனால் திறமைகளை வளர்த்தெடுக்க முடியாவண்ணம் ஐசிசி வருவாய்ப் பகிர்வில் செல்வந்த கிரிக்கெட் வாரியங்கள் பெருவாரியை அள்ளிக் கொண்டு போவதில் மே.இ.தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், ஏன் பாகிஸ்தான் கூட பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் உண்டு என்பதை அறிந்தே விராட் கோலி, தனக்கு அணித்தேர்வு ஆரோக்கியத் தலைவலி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருப்பது ஆச்சரியம்தான்!
தொடரை வென்றவுடன் விராட் கோலி கூறியதாவது:
எங்களுக்குத் தேவையான வெற்றி முனைப்பு, உத்வேகம் கிடைத்துள்ளது. சமச்சீரான ஒரு ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. எனக்கு இப்போதுள்ள கடினமான வேலையாக இருப்பது யாரை சேர்ப்பது, யாரை வெளியில் அமர்த்துவது என்பது தான்.
வெளியில் இருந்து வந்து கே எல் ராகுல் கூட சிறப்பாக ஆடினார். அதேநேரத்தில், எங்களால் தவானை வெளியில் அமர்த்துவது குறித்து சிந்தித்து கூட பார்க்க முடியாது. அவரின் அதிரடி அனைவரும் அறிந்ததே.
இங்கிலாந்து என்று பார்த்தால், நாங்கள் பெரிதாக எதிரணியினர் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் எங்கள் மீது கடுமையாகப் பாய்ந்து ஆடினால், நம்மிடமும் பேட்டிங் பவரைக் காட்ட வீரர்கள் உள்ளனர். கூடுதலாக நம்மிடம் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர். இங்கிலாந்துடன் நிச்சயம் கடும் சவால் நிறைந்த தொடராகவே இருக்கும்.
ஒரு சாந்தமான சூழலை உருவாக்குவது ஒன்றும் கடினமல்ல. இந்திய அணியில் கட்டமைப்பு உள்ளது. வீரர்களின் தரம் பரிசோதிக்கப்பட்டு கொண்டே இருக்கும். சிறப்பாக செயல்பட வேண்டியது அவர்கள் கையில் தான் உள்ளது.
கேப்டனாக இருந்தாலும் நான் யாரையும் வற்புறுத்துவதில்லை, அவரவர்க்கு தெரியும் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று. இவ்வாறாக கூறினார் விராட் கோலி.