மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
42வது சதத்தை பூர்த்தி செய்த கோலி 120 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவு அணியின் எவின் லீவிஸ் 65 ரன்கள் சேர்த்தார். மழை குறுக்கிட்டதால் அந்த அணிக்கு 270 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில், சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. பின்னர் இந்த வெற்றி குறித்து பேசிய விராட் கோலி.. இந்த வெற்றிக்கு காரணம் தான் இல்லை எனவும் மற்ற இரண்டு வீரர்கள் சரியான நேரத்தில் அற்புதமாக ஆடினார்கள் அவர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறினார்.
இது குறித்து அவர் பேசியதாவது…
270 ரன்களுக்கு மேல் எடுத்தால் இந்த மைதானத்தில் எட்டி பிடிப்பது கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். அதன் போலவே நடந்தது வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடக்கை பேட்ஸ்மேன்கள் அதிக வீரர்கள் உள்ளனர். இதன் காரணமாக குல்திப் யாதவ் விளையாடினார். அவரும் அற்புதமாக ஆடினார். ஸ்ரேயாஸ் ஐயர் இந்தப் போட்டியில்தான் அணிக்குள் வந்தார். அற்புதமாக ஆடி தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். இந்த இருவரும்தான் வெற்றிக்கு காரணம் என்று கூறினார் விராட் கோலி.