இதுலயும் நான் தாண்டா “நம்பர் 1”… முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து மிகப்பெரும் வரலாறும் படைத்த பும்ராஹ்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 33வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா – இலங்கை இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 357 ரன்கள் குவித்தது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மடுன்ஷானகா 5 விக்கெட்டுகளையும், சம்மீரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பின் 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள இலங்கை அணி, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியை போன்றே இந்த போட்டியிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
போட்டியின் முதல் ஓவரை வீசிய பும்ராஹ், முதல் ஓவரின் முதல் பந்திலேயே இலங்கை அணியின் பதும் நிஷான்காவின் விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றிய பும்ராஹ், இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ், பும்ராஹ்வை போலவே முதல் பந்தில் விக்கெட்டை எடுத்தார். இலங்கை அணியின் கருணாரத்னே (0), மெண்டீஸ் (1), சமரவிக்ரமே (0) ஆகியோர் சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன் மூலம் போட்டியின் 6 ஓவர்கள் முடிவில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள இலங்கை அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.