தொடைப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் விலகியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவுற்றவுடன், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்குகிறது.
வருகிற மார்ச் 17ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணி பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. விரைவாக இந்தியாவிற்கும் வரவுள்ளார்கள்.
இந்த சூழலில், ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் உள்ளூர் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆஸ்திரேலியா ஒருநாள் அணியில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் முக்கிய வீரராக கருதப்பட்டது.
இந்த ஒருநாள் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் பயிற்சி செய்து வந்த அவருக்கு கால் தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இவரை பரிசோதித்த அணியின் மருத்துவர்கள் காயம் சற்று தீவிரமாக இருக்கிறது, குணமடைவதற்கு ஓய்வு தேவை என தெரிவித்தனர்.
மருத்துவர்கள் கொடுத்த இந்த அறிக்கையின்படி முடிவெடுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரில் இருந்து ஜெய் ரிச்சர்ட்சன் விலகுவதாக அறிவித்தனர். மேலும் இவர் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்று தெரிவித்திருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் இவர், வருகிற சீசனில் விளையாடாதது பின்னடைவை தந்திருக்கிறது. ஏற்கனவே முக்கியமான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடனான ஒருநாள் தொடரில், விரைவில் இவருக்கான மாற்று வேகப்பந்துவீச்சாளர் அறிவிக்கப்படும். அவர் இந்தியாவிற்கு வந்தடைவார் எனவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 17ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும், 19ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்திலும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருல்நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.