இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னணி வீரர் டோனி ஆகியோர் உலக கோப்பையில் அச்சுறுத்துவார்கள் என தென் ஆப்பரிக்க வீரர் டுமினி கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் 2 முறை தென் ஆப்பரிக்க அணி களம் கண்டு, தோல்வி அடைந்தது. மூன்றாவது முறையாக வரும் 5ம் தேதி இந்திய அணியுடன் மோத உள்ளது.
இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து தென் ஆப்பரிக்க முன்னணி வீரர் டுமினி கூறுகையில், ‘இந்திய அணியில் அதிகமான போட்டியின் வெற்றியாளர்கள் இருக்கின்றனர்.
வேக பந்து வீச்சு, சுழல் பந்து வீச்சு என இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் பும்ராவின் ஃபார்ம் பயங்கரமாக இருந்தது. இதனை உலக கோப்பையிலும் எதிர்ப்பார்க்கலாம்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, அனுபவ வீரர் டோனி ஆகியோர் நிச்சயம் அச்சுறுத்துவார்கள். இவர்களை தாண்டி அந்த நாளில் எப்படி ஆடப்போகிறோம் என்பதில்தான் வெற்றி வாய்ப்பு அமையும்’ என கூறியுள்ளார்.
பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம். முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால் புதன் அன்று, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி.
எனினும் முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மேலும் சோதனைகளைச் சந்தித்து வருகிறது தென் ஆப்பிரிக்க அணி. இளம் வேகப்பந்துவீச்சாளரான லுங்கி என்கிடி, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்துள்ளார். இந்தக் காயம் குணமாக 7 முதல் 10 நாள்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார் என்கிடி. அடுத்த திங்கள் அன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது. காயத்திலிருந்து குணமாகி, அந்த ஆட்டத்தில் என்கிடி விளையாடுவார் என தெ.ஆ. அணி நம்பிக்கையுடன் உள்ளது.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன், இந்த உலகக்கோப்பையின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. ஆர்ச்சர் வீசிய பவுன்சர் ஹெல்மெட்டில் பட்டதால் காயமடைந்த ஆம்லா, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆம்லா விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸி கூறியதாவது:
மிகவும் ஆக்ரோஷமாக விளையாடவேண்டும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் லுங்கி என்கிடிக்குக் காயம் ஏற்பட்டவுடன் நிலைமை மாறிவிட்டது. இதனால் 15 முதல் 20 ஓவர்களைச் சுழற்பந்துவீச்சாளர்களையும் மிதமான வேகப்பந்துவீச்சாளர்களையும் கொண்டு முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் முதன்மையான திட்டம் போய்விட்டது. அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.