இது என்ன கிரவுண்டா, புறம்போக்கு நிலமா.. சேப்பாக்கம்ல இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது – எரிச்சலான சுனில் கவாஸ்கர்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாய் புகுந்ததால் ஆட்டம் துவங்குவதற்கு சில நிமிடங்கள் தாமதமானது. இதற்காக சேப்பாக்கம் ஊழியர்களை கடுமையாக சாடியுள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி துவங்கி ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சிஎஸ்கே அணி தனது முதல் லீக் போட்டியில் குஜராத் அணியை அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொண்டது. அதில் தோல்வியையும் தழுவியது.

இரண்டாவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்தன. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்த லீக் போட்டியை கண்டுகளிக்க ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால் சேப்பாக்கம் மைதானத்தின் அரங்கம் நிறைந்தபடி காணப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளே வருவதற்கு தாமதம் ஆனது. ஏனெனில் மைதானத்திற்குள் நாய் ஒன்று தடம்மாறி புகுந்துவிட்டது. நீண்ட நேரம் உள்ளேயே சுற்றித்திரிந்ததால் போட்டி துவங்குவதற்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தாமதமாகியது.

சேப்பாக்கம் மைதானத்திற்குள் போட்டிக்கு நடுவே நாய் புகுவது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் மாதம் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் நடுவேயும் நாய் புகுந்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

நாய் புகுந்ததால் போட்டி தாமதம் ஆனதற்கு தொலைக்காட்சி நேரலையில் கமென்டரி செய்துகொண்டிருந்த ஜாம்பவான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சேப்பாக்கம் மைதானத்தின் ஊழியர்களை கடுமையாக சாடியுள்ளார்

“இது போன்ற செயலால் போட்டி தாமதம் ஆவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நாய் புகாத அளவிற்கு ஊழியர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். உள்ளே புகுந்தபின் அதை விரட்டுவதில் கவனம் செலுத்தக்கூடாது.

இது ஒன்றும் முதல்முறையல்ல. ஒரு முறை மட்டுமே தவறுதலாக நடந்துவிட்டது என்று ஏற்றுக் கொள்ளலாம். மீண்டும் மீண்டும் இப்படி நடப்பது போட்டியை தாமதப்படுத்துவது, பார்வையாளர்களுக்கு வீண் மனஉளைச்சலை கொடுக்கும்.” என்று பேசினார்.

Mohamed:

This website uses cookies.