உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டன் பொறுப்பில் இருந்துகொண்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் கேன் வில்லியம்சன்.
நியூசிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் எவரின் கவனத்தையும் துவக்கத்தில் பெறவில்லை. உலக கோப்பை அரையிறுதி வரை நியூசிலாந்து செல்வதே கடினம் என்றவொரு கணிப்பில்தான் இருந்தது. ஆனால் அரையிறுதிக்கு முன்னேறி, அங்கு இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டி வரை நியூசிலாந்து செல்வதற்கு ஒரே காரணமாகத் திகழ்ந்தது அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான்.
இங்கிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில், கேன் வில்லியம்சன் 30 ரன்கள் அடித்தார். இவர் உலக கோப்பையில் 10 இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் கேப்டன் பொறுப்பில் இருந்துகொண்டு அதிக ரன்கள் அடித்தவர் என்ற 12 ஆண்டுகள் சாதனையை முறியடித்தார்.
ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – 578 ரன்கள் (2019)
- ஜெயவர்த்தனே (இலங்கை) – 548 ரன்கள் (2007)
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 539 ரன்கள் (2007)
- ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) – 507 ரன்கள் (2019).
நியூசிலாந்திற்கு நேர்ந்த சோகம்
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதின. அதில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்து சூப்பர் ஓவர் வரை சென்றது அதிலும் சமநிலையில் முடிந்தது இறுதியில் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து இரு முறை இறுதிப் போட்டி வரை வந்து நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு இது முதல் உலகக் கோப்பையாகும்.
அணியை தனி ஒருவராக இறுதிப்போட்டி வரை எடுத்து வந்த கேன் வில்லியம்சனுக்கு தொடர் நாயன் விருது வழங்கப்பட்டது.