அரைசதம் அடித்து களத்தில் நின்ற கேஎல் ராகுல் தவறான நேரத்தில் ஆட்டம் இழந்ததால், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் கையில் இருந்த போட்டியை கோட்டைவிட்டது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு இம்முறை எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை.
இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் சுப்மன் கில் ஆட்டம் இழந்தார். அதன்பின் பொறுப்பை எடுத்துக் கொண்ட சகா, 47 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழக்க குஜராத் அணி சற்று தடுமாற்றம் கண்டது.
அந்த நேரத்தில் பேட்டிங் பொறுப்பை எடுத்துக்கொண்ட ஹர்திக் பாண்டியா கடைசி வரை நின்று 50 பந்துகளில் 66 ரன்கள் அடித்திருந்தார். கடைசி ஓவரில் இவரும் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் அடித்திருந்தது குஜராத் அணி.
இந்த இலக்கை பின்தொடர்ந்த லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் மேயர்ஸ் ஜோடி, முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் சேர்த்தது. மேயர்ஸ் 24 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த குருனால் பாண்டியா தனது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை விளையாடிக்கொடுத்து 23 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் வந்த பூரான் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
ஒரு பக்கம் நங்கூரம் போல நின்றுகொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பிறகு இவரது ஆட்டம் மிகவும் மந்தமாகியது.
கடைசி ஆறு ஓவர்களில் லக்னோ அணியின் வெற்றிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது, குஜராத் அணியினர் பந்து வீச்சில் தாக்கம் ஏற்படுத்தி பௌண்டரிகளை விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் அழுத்தமடைந்த லக்னோ அணி, கடைசி மூன்று ஓவர்களில் 23 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
18வது ஓரை வீசிய மோஹித் சர்மா வெறும் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 19ஆவது ஓரை வீசிய முகமது சமி வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க, கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் களத்தில் செட்டில் பேட்ஸ்மேன் ஆக கேஎல் ராகுல் இருந்ததால், லக்னோ அணியினர் நம்பிக்கையை இழக்கவில்லை.
கடைசி ஓவரை வீசிய மோஹித் சர்மாவின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் கேஎல் ராகுல். அடுத்த பந்தில் தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார். இவர் 68 ரன்கள் அடித்திருந்து, நின்று ஜெயித்துக்கொடுக்க வேண்டிய தருணத்தில் ஆட்டம் இழந்தார்.
கடைசி நான்கு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டியதாக இருந்தது. உள்ளே வந்த ஸ்டாய்னிஸ் பொறுப்பின்றி தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். மூன்று பந்துகளில் 10 ரன்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட லக்னோ அணி பேட்ஸ்மேன்கள், ஹூடா மற்றும் பதோனி இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ரன் அவுட் ஆகினர்.
கடைசி ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த மோஹித் சர்மா தனது பங்கிற்கு இரண்டு விக்கெட் மற்றும் அணிக்கு இரண்டு ரன் அவுட்கள் எடுக்க உதவினார். லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.