இந்த ஒரு ஆள சமாளிக்கிறது தான் எனக்கு ரொம்ப கஷ்டம்… தொல்லை கொடுக்கும் பந்துவீச்சாளர் இவர் தான்; கே.எல் ராகுல் ஓபன் டாக்
ஆஸ்திரேலிய அணியுடனான நடப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல், தனக்கு சவாலாக இருக்கும் பந்துவீச்சாளர் யார் என்பதை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்களுக்கு, ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், கே.எல் ராகுல் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் அபார வெற்றியில் கேப்டனான கே.எல் ராகுலின் பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது.
காயத்தில் இருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்து மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கே வலு சேர்த்து வரும் கே.எல் ராகுல் தான் தற்போதைய கிரிக்கெட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்தநிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை ஒளிபரப்பி வரும் ஜியோ சினிமாவில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கே.எல் ராகுல், தனக்கு பெரும் சவாலாக இருக்க கூடிய பந்துவீச்சாளர் யார் என்பதையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
சவாலான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த கே.எல் ராகுல், ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசீத் கான் தான் தனக்கு பெரும் தொல்லை கொடுக்கும் பந்துவீச்சாளர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் தன்னை பொறுத்தவரையில் சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டின் ‘GOAT’ என்று தேர்வு செய்துள்ள கே.எல் ராகுல், ராகுல் டிராவிட்டும், சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டை பார்த்து தான் தனக்கும் கிரிக்கெட் மீதான ஆர்வம் வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய கே.எல் ராகுல், யாரிடமாவது இருந்து ஒரு நல்ல ஷாட்டை கடன் வாங்க வேண்டும் என விரும்பினால், அது முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் அசால்டாக அடிக்கும் ஸ்கூப் ஷாட் தான் என்று தெரிவித்துள்ளார்.