விவியன் ரிச்சர்ட்சிற்கும், விராத் கோஹ்லிக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. களத்தில் அமைதியாக செயல்பட விரைவில் கோஹ்லி கற்றுக் கொள்வார்,” என, மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்தது. முதல் இரு போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று கோட்டை விட்ட இந்திய அணி, மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்றது. இதனால், இந்திய கேப்டன் கோஹ்லிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீசின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் கூறியது:
இந்திய அணி கேப்டன் கோஹ்லி, இளம் வீரராக உள்ளார். கேப்டனாக இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என, புரிந்து கொள்ள வேண்டும். ஆர்வம் மிகுதியால், அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்.
இதனால், சில நேரங்களில் எதிரணிகளில் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுகிறது. தவிர, சக வீரர்களும் பயந்து விடுகின்றனர். இவரது இந்தக் குணத்தை பார்க்கும் போது, அப்படியே வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் போல உள்ளது.
சில ஆண்டுகளுக்குப் பின், அமைதியாக செயல்படத் துவங்கினார். முடிவுகள் எப்படி இருந்தாலும் அமைதியாக இருப்பார். இதுபோல, கோஹ்லியும் அமைதியாக செயல்பட விரைவில் கற்றுக் கொள்வார் என, நினைக்கிறேன்.
மாற்றம் நல்லதா
மாறுபட்ட ஆடுகளங்கள், வெவ்வேறான சூழ்நிலைகளில் களமிறங்கும் போது, மாற்றங்கள் தேவைப்படும். நவீன கிரிக்கெட்டில் தொடர்ந்து போட்டிகள் நடப்பதால், பவுலர்களுக்கு சற்று ஓய்வு கொடுப்பது அவசியம். கோஹ்லி கேப்டனாக களமிறங்கிய 35 டெஸ்டிலும், விளையாடும் ‘லெவனில்’ மாற்றம் இருந்ததற்கு, இவை தான் காரணம்.
அதேநேரம், சிறந்த டெஸ்ட் அணி என்றால், ஒரு சில நேரங்களில் மட்டும் தான் மாற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு டெஸ்டிலும், மாற்றம் செய்தால், வீரர்களுக்கும் ஒருவித பிடிப்பு இல்லாமல் போய்விடும். இன்று சரியாக விளையாடவில்லை என்றால், அடுத்த டெஸ்டில் நாம் இருக்க மாட்டோம் என்ற எண்ணம் தோன்றி, கவலையடையச் செய்து விடும்.
தொடர்ந்து அணியை மாற்றாமல் இருந்தால், போட்டியில் எப்படி சிறப்பாக செயல்படுவது என வீரர்கள் யோசிக்கத் துவங்குவர். ஒருமுறை சொதப்பினால், அடுத்த வாய்ப்பில் சாதிக்க வேண்டும் என, உறுதி கொள்வர். மாறாக, வீரர்களை மாற்றிக் கொண்டே இருப்பது, ஆரோக்கியமான விஷயம் அல்ல.
ரகானே முக்கியம்
தென் ஆப்ரிக்க தொடரில் முதல் இரு டெஸ்டில், ரகானேவை சேர்க்காமல் விட்டது ஆச்சரியமாக இருந்தது. இலங்கை தொடரில் இவர் ஏமாற்றினார் என்றாலும், அன்னிய மண்ணில் எப்போதும் அசத்துவார். ஜோகனஸ்பர்க்கில் இவர் சிறப்பாக விளையாடி, தனது தேர்வை நிரூபித்தார்.
இவ்வாறு மைக்கேல் ஹோல்டிங் கூறினார்.
மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில்,” கோஹ்லி ‘நம்பர்-1’ பேட்ஸ்மேன். மற்ற இந்திய வீரர்களை விட, பல மைல் துாரம் மேலானவராக உள்ளார்.
இதற்கு முன் சச்சின், இப்படித் தான் இருந்தார். டிராவிட், லட்சுமணை விடவும் முன்னணியில் உள்ளார். வரும் இங்கிலாந்து தொடரில் கோஹ்லி ரன்கள் குவித்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்,” என்றார்.
சரிப்பட்டு வருவாரா பும்ரா
மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில்,” ஆடுகளத்தில் பந்தை அழுத்தமாக ‘பிட்ச்’ செய்கிறார் பும்ரா. இதனால் பந்து, குறைவாக அல்லது உயரமாக எழுந்து வருகிறது. இதை உடனடியாக கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறுகின்றனர்.